'சாமி, திருப்பாச்சி' புகழ் நடிகர் கோட்டா சீனிவாசராவ் காலமானார் | 300 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'வாயாடி பெத்த புள்ள' | யு டியூப் தளத்தில் 'டாப் வியூஸ்' பெற்ற தமிழ் பாடல்கள் : ஒரு ரீவைண்ட்…! | 23 நாளில் படப்பிடிப்பு... ரூ.25 லட்சத்தில் படம் : வியக்க வைக்கும் ‛மாயக்கூத்து' | ராஜா சாப் படத்தில் விக் வைத்து நடிக்கிறாரா பிரபாஸ்? : ரசிகர்களுக்கு எழுந்த புதிய சந்தேகம் | ராமாயணா முதல் பாகத்தில் யஷ் வருவது வெறும் 15 நிமிடங்கள் தான் | மலையாளத்தில் டைம் ட்ராவல் பின்னணியில் உருவாகும் 'ஆடு 3' | சுதீப்பின் 47வது படம் அறிவிப்பு : ஜூலையில் துவங்கி டிசம்பரில் ரிலீஸ் | குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிடும் ஸ்ருதிஹாசன் | அட்லி இயக்கும் விளம்பரத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், ஸ்ரீ லீலா |
மக்கள் திலகம் எம் ஜி ஆரின் மகத்தான கலைப் படைப்புகளில் ஒன்றாக, இன்றும் ரசிகர்களால் ஆராதிக்கப்படும் அமரத்துவம் வாய்ந்த அற்புத கலைப் பெட்டகமாக உருவான “அடிமைப் பெண்” திரைப்படத்தின் சில அறிந்திராத பக்கங்களைத்தான் நாம் இங்கு காண இருக்கின்றோம். இயக்குநர் கே சங்கர் இயக்கிய திரைப்படங்களிலேயே மிகவும் சிறப்புக்குரிய திரைப்படமாக பார்க்கப்படும் இந்த “அடிமைப் பெண்” திரைப்படத்தை பாராட்டாத திரை ஆர்வலர்களும் இல்லை, திரை வல்லுனர்களும் இல்லை. 1969ல் வெளிவந்து, 25 வாரங்கள் ஓடி மாபெரும் வசூலை அள்ளித் தந்த இத்திரைக் காவியத்தை “எம் ஜி ஆர் பிக்சர்ஸ்” சார்பில் எம் ஜி ஆரே தயாரித்து, மாறுபட்ட இரட்டை வேடங்களில் நடித்தும் இருந்தார்.
இயக்குநர் கே சங்கரின் இயக்கத்தில் 1967க்கு முன்பே இந்த “அடிமைப் பெண்” திரைப்படத்தின் உருவாக்கம் ஆரம்பமாகியிருந்தது. அதில் சரோஜாதேவி, கே ஆர் விஜயா மற்றும் ஜெயலலிதா என மூன்று நாயகியர் நடித்துமிருந்தனர். இதனை உறுதி செய்யும் பொருட்டாக, 1966ம் ஆண்டு எம் ஜி ஆர் மற்றும் சரோஜாதேவி நடிப்பில் ஆர் எம் வீரப்பன் தயாரித்து “சத்யா மூவீஸ்” சார்பில் வெளிவந்த “நான் ஆணையிட்டால்” என்ற திரைப்படத்தின் ஒரு பாடல் காட்சியான “நல்ல வேளை நான் பிழைத்துக் கொண்டேன்” என்ற பாடலின் இடையே “நானே எழுதி நானே நடித்த நாடகத்தில் நல்ல திருப்பம்” என்று எம் ஜி ஆர் பாடுவது போல் வரும் காட்சியில் “அடிமைப் பெண்” என்ற விளம்பரம் பளிச்சிடுவதாக காட்டியிருப்பர்.
அதன் பின் எம் ஜி ஆர் துப்பாக்கியால் சுடப்பட்டு, குணமாகி மீண்டும் நடிக்க வந்து, படப்பிடிப்பைத் தொடங்கிய போது சரோஜாதேவி மற்றும் கே ஆர் விஜயா ஆகிய இருவரும் இல்லாமல் ஜெயலலிதாவிற்கு மட்டும் இரட்டை வேடம் தரப்பட்டிருந்தது. நாயகி, வில்லி என இரட்டை வேடங்களில் நடித்திருந்தார் ஜெயலலிதா. கே ஆர் விஜயா நடித்திருந்த கதாபாத்திரத்தில் நடிகை ராஜஸ்ரீயை நடிக்க வைத்திருந்தனர். பிரமாண்டமான அரங்க அமைப்புகள் அமைத்து அதுவரை படமாக்கப்பட்டிருந்த பழைய “அடிமைப் பெண்” படத்தின் படச்சுரளையும் துணிந்து தூக்கி எறிந்திருந்தார் எம் ஜி ஆர். மீண்டும் புதிய வடிவில் உருவாக்கம் செய்யப்பட்ட “அடிமைப் பெண்” திரைப்படம் 1969ம் ஆண்டு மே 1 அன்று தமிழகமெங்கும் திரையிடப்பட்டு ஒரு வெள்ளிவிழா திரைப்படமாக மாபெரும் வெற்றியை ஈட்டித் தந்தது மக்கள் திலகம் எம் ஜி ஆருக்கு. மேலும் அந்த ஆண்டின் சிறந்த திரைப்படத்திற்கான தமிழக அரசின் முதல் பரிசினையும் வென்றெடுத்தது இந்த “அடிமைப் பெண்”.